×

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் ₹3.7 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் புதிய தாலுகா அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி, பிப்.29: நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் ₹3.7 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்டலூர் புதிய தாலுகா அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு புதிய மாவட்டம் இதேபோல், செங்கல்பட்டு தாலுகாவிலிருந்து வண்டலூர் புதிய தாலுகாவாகவும், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி உதயமானது. இதில், வண்டலூர் தாலுகாவில் வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பாக்கம் ஆகிய குறு வட்டங்களில் அடங்கிய 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில், புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்படும் வரை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே சமுதாய கூடத்தில் வண்டலூர் தாலுகா அலுவலகம் இயங்கி வந்தது. இதனையடுத்து, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட அரசு பயணியர் விடுதி வளாகத்தில் ₹3.7 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் திறந்து வைத்தார்.

அப்போது, காணொலி காட்சி மூலம் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் பேசினார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, துணை தலைவர் ஜி.கே.லோகநாதன் வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் ₹3.7 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் புதிய தாலுகா அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,taluk ,Nandivaram-Kooduvanchery ,Chief Minister ,M.K.Stalin ,Guduvanchery ,Nandivaram ,Guduvancheri ,Kanchipuram ,Chengalpattu ,Chengalpattu… ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்